Archives: ஜனவரி 2022

தயக்கமில்லா கண்ணீர்

“என்னை மன்னிக்கவும்,” சீமா தன் கண்ணீருக்காக மன்னிப்புக் கேட்டார். அவருடைய கணவர் இறந்த பிறகு, தன்னுடைய பதின்ம வயது குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை அவர் ஏற்க நேர்ந்தது. அவருடைய திருச்சபை, அவருடைய சுமையை குறைக்கும் விதத்தில் ஒரு வாரயிறுதி உல்லாச முகாமுக்கு அவர்களை அழைத்து மகிழ்ச்சிபடுத்தியது. அந்த மகிழ்ச்சி பெருமிதத்தில் கண்ணீர் சிந்திய சீமா, தன்னுடைய கண்ணீருக்காக மன்னிப்புக் கோரினாள்.

நாம் ஏன் கண்ணீருக்காக மன்னிப்புக் கேட்கிறோம்? சீமோன் என்னும் ஒரு பரிசேயன் இயேசுவை விருந்துக்கு அழைக்கிறான். உணவின் இடையிலே ஒரு பாவியாகிய பெண் தன்னோடு பரிமளதைலத்தைக் கொண்டுவருகிறாள். “அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய  பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்” (லூக்கா 7:38). சற்றும் தயக்கமின்றி இந்த ஸ்திரீ, வெளிப்படையாக தன்னுடைய அன்பை பிரதிபலிக்க தன் தலைமயிரினால் இயேசுவின் பாதத்தைத் துடைத்தாள். நன்றி பெருக்காலும், அன்பாலும் அவள் கண்ணீரின் மேலே பரிமள தைலத்துடன் முத்தங்களை பரிசாக்கினாள். அவளுடைய இந்த செய்கை இந்த விருந்தை ஆயத்தப்படுத்திய இரக்கமற்ற பரிசேயனின் எதிர்பார்ப்பிற்கு மாறாக இருந்தது.

அவனுக்கு இயேசுவின் பதில்? அவர் அவளின் உற்சாகமான அன்பின் வெளிப்பாட்டை புகழ்ந்து, அவளின் அநேக பாவங்கள் “மன்னிக்கப்பட்டது” (வச. 44-48) என்று அறிவித்தார்.

நன்றியுணர்வினால் கண்ணீர் பெருக்கெடுக்கும்போது, அந்த கண்ணீரை நாம் அடக்கிவைக்க முற்படுகிறோம். ஆனால் தேவன் நம்மை உணர்ச்சி மிகுந்தவர்களாகவே படைத்துள்ளார். நாம் அவரை நம் உணர்வுகள் மூலம் கனப்படுத்துகிறோம். லூக்கா நற்செய்தியில் வரும் பெண்ணைப்  போல நாமும் நமது நல்ல தேவனிடம் நம் அன்பை தயக்கமின்றி வெளிப்படுத்துவோம். தேவன் நம் தேவைகளை எல்லாம் சந்திக்கிறார். அவர் நம் நன்றியின் பதில்களையும் சுதந்திரமாக ஏற்றுக்கொள்ளுகிறார்.

பதில் கிடைக்காத ஜெபங்கள்

நாம் அடைந்து விட்டோமா? இன்னும் இல்லை. நாம் அடைந்து விட்டோமா? இன்னும் இல்லை. எங்கள் பிள்ளைகள் சிறுவர்களாய் இருந்தபோது, வீட்டை அடையும் 16 மணி நேர பயணத்தில் நாங்கள் இப்படித்தான் கேட்டுக்கொண்டே விளையாடிக்கொண்டு வந்தோம். எங்களின் மூத்த பிள்ளைகள் இருவரும் இந்த விளையாட்டை துடிப்புடன் விளையாடினர். அவர்கள் அந்த கேள்விகளை பலமுறை கேட்டுக்கொண்டேயிருந்தனர். நாம் அடைந்து விட்டோமா? என்ற இந்தக் கேள்வியை என்னுடைய குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்பர். நானும் வாகனத்தை ஓட்டிக்கொண்டே “இல்லை” என்று அதே ஆர்வத்துடன் பதிலளிப்பேன். நாங்கள் இன்னும் வந்து சேரவில்லை, ஆனால் சீக்கிரத்தில் சேர்ந்துவிடுவோம் என்பதே பதில். 

உண்மை என்னவெனில், பெரியவர்கள் அந்த கேள்வியை சத்தமாய் சொல்லவில்லை என்றாலும் அந்த கேள்வியில் வேறு ஒரு மாற்று முறையை விரும்புகின்றனர். ஆனால் நாம் அதே காரணத்திற்காகத் தான் கேட்கிறோம். நாம் சோர்ந்துவிட்டோம், நம் கண்கள் குழிவிழுந்து போயிற்று (சங்கீதம் 6:7). ஒவ்வொரு நாளும் ஏற்படுகிற வாழ்க்கை பிரச்சனைகள், வேலை ஸ்தலத்தில் ஏற்படும் முடிவில்லா சோதனைகள், உடல் ஆரோக்கியம் மற்றும் உறவு ரீதியான பிரச்சனைகள் ஆகியவற்றால் நாம் பெருமூச்சி விட்டு இளைத்துப் போகிறோம் (வச. 6). நாம் அடைந்து விட்டோமா? இந்த பாடுகள் எது வரைக்கும் தேவனே? என்று நாம் கதறுகிறோம்.   

அந்த வகையான சோர்வை சங்கீதகாரன் நன்கு அறிந்து தேவனிடம் முக்கியமான கேள்வியை கேட்கிறார். அக்கறையுள்ள பெற்றோர் போல, தாவீதின் அழுகுரலைக் கேட்டு மிகுந்த இரக்கத்தால் ஏற்றுக்கொண்டார் (வச. 9). நாம் தேவனிடம் கேட்பதற்கு வெட்கப்படத் தேவையில்லை. கர்த்தருடைய சமுகத்தில், “எதுவரைக்கும் தேவனே?” என்று தைரியமாகக் கேட்கலாம். அவரோ “இன்னும் இல்லை, ஆனால் சீக்கிரத்தில் நடக்கும். நான் நல்ல தேவன், என்னை நம்புங்கள்" என்பார்.

கிறிஸ்துவைப் போல பரிபூரணராய்

காத்லீன் நாரிஸ் என்னும் எழுத்தாளர், “பரிபூரண வாதம் (Perfectionism) என்பது எனக்குத் தெரிந்த வார்த்தைகளிலேயே பயங்கரமான ஒரு வார்த்தை,” என்கிறார். அவர் நவீன காலத்து பரிபூரண வாதத்தையும், மத்தேயுவில் விளக்கியுள்ள பரிபூரணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குகிறார். நவீன காலத்து பரிபூரண வாதம் என்பது ஒரு தீவிர உளவியல் துன்பம். அது மக்களை எந்த ஒரு சவாலையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளவிடாமல் தடுக்கிறது என்கிறார். ஆனால் மத்தேயுவில் வரும் பூரணம் என்பது “முதிர்ந்த” அல்லது “முழுமையான” என்று பொருள்படுகிறது. “பரிபூரணம் என்பது வளர்ச்சிக்கு இடம் தந்து, முதிர்ச்சியடைந்தவர்களாய் மற்றவர்களுக்கு நம்மையே தருவதாகும்” என்று நாரிஸ் குறிப்பிடுகிறார். 

பரிபூரணம் என்பதை இந்த வழியில் புரிந்துகொள்ள மத்தேயுவில் ஒரு ஆழமான கதை இருக்கிறது. மத்தேயு 19ல் இயேசுவிடம் ஒருவன் வந்து “நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும்?” என்று கேட்கிறான் (வச. 16). இயேசு பதிலுக்கு “கற்பனைகளைக் கைக்கொள்” என்கிறார் (வச. 17). இதையெல்லாம் கைகொண்டிருக்கிறேனே இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன? என்று அந்த மனிதன் கேட்கிறான் (வச. 20). 

அப்பொழுது அந்த மனிதனின் ஐசுவரியம் தான் அவன் மனதைப் பற்றியிருக்கும் பிடி என்பதை இயேசு உணர்ந்துகொண்டார். எனவே இயேசு, “நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்” என்கிறார் (வச. 21). 

நாம் ஒவ்வொருவரும் பரிபூரணத்திற்கு அவரவருக்கு சாதகமான விளக்கத்தை வைத்திருக்கிறோம். நாம் பற்றியிருக்கும் ஆஸ்திகள் அல்லது பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கும் முயற்சி பயனற்றது. இன்று இயேசுவின் மென்மையான அழைப்பைக் கேட்டு உங்களை ஒப்படையுங்கள், பரிபூரணத்தில் விடுதலையடையுங்கள், அது தேவனால் மட்டுமே கூடும் (வச. 26).

நாம் தேவனை நம்புகிறோம்

வினிதாவுக்கு குழந்தை பிறக்க இன்னும் ஆறு வாரங்கள் இருந்தபோது, கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய கொலஸ்டாஸிஸ் என்ற கல்லீரல் நோய் பிரச்சினை அவருக்கு இருந்தது கண்டறியப்பட்டது. வினிதாவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, இன்னும் 24 மணி நேரத்தில் குழந்தை வெளியே வந்துவிடும் என்று மருத்துவர்கள் அறிவித்தனர். அதேவேளையில், மருத்துவமனையின் மறுபக்கத்தில் கோவிட்-19 சிகிச்சைக்கு தேவையான வென்டிலேட்டர் மற்றும் தேவையான உபகரணங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். அதனால் வினிதாவை பராமரிக்கமுடியாமல் வீட்டுக்கு திருப்பி அனுப்பிவிட்டனர். அவள் தேவன் மீதும் அவருடைய திட்டங்கள் மீதும் நம்பிக்கை வைக்க முடிவு செய்தாள். சில நாட்களுக்குப் பிறகு ஓர் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

வேதம் நம்மில் வேரூன்றும்போது நாம் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வழிகளை அது முற்றிலும் மாற்றுகிறது. எரேமியாவின் நாட்களில், மக்கள் மனிதர்களையும் விக்கிரகங்களையும் நம்பி வாழ்ந்தனர். தீர்க்கதரிசி இருவேறு மனிதர்களைப் பற்றிய வித்தியாசத்தை எடுத்துரைக்கிறார். “மனுஷன் மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக் கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன்” என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா 17:5). “கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத்தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும்... மரத்தைப் போலிருப்பான்” (வச. 7-8). 

நம்முடைய பிரச்சனைகளுக்கான தீர்வுக்காய் நாம் அவரை விசுவாசத்தில் சார்ந்திருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். அவர் நமக்குத் தேவையான பெலத்தைத் தருகிறார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தாழ்மையுள்ள ஜோர்ன்

குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் ஜான் இவ்வளவாய் உயர்வாரென்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அவரது பார்வை குறைபாடும் இன்னும் பிற உடல் நலக்குறைகள் மத்தியிலும், அவர் நார்வேயில் உள்ள தனது கிராமத்தில் உள்ளவர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்தார். உடல் வேதனையின் காரணமாக தூங்க முடியாத இரவுகளில், அவர் ஜெபித்தார். ஜெபத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் நினைத்து, ஒவ்வொரு நபரையும் பேர் பேராகச் சொல்லி, அவர் இதுவரை சந்திக்காத பிள்ளைகளுக்காகக் கூட ஜெபித்தார். ஜனங்கள் அவருடைய கண்ணியத்தைப் பெரிதும் நேசித்து, அவருடைய புத்தியையும் அறிவுரையையும் பெறுவார்கள். நடைமுறையில் அவர்களுக்கு உதவ இயலாவிட்டாலும், அவருடைய அன்பைப் பெற்று அவர்கள் செல்லுகையில் அவர்கள் இன்னும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருவார்கள். ஜோர்ன் இறந்தபோது, அவருக்கு குடும்பம் இல்லாவிட்டாலும், அந்த வட்டாரத்திலேயே அவரது இறுதிச் சடங்கு வெகு விமர்சையாக இருந்தது. அவர் எண்ணியதைக் காட்டிலும் அவரது ஜெபம் மலர்ந்து மிகுந்த பலனைத் தந்தது.

இந்த தாழ்மையுள்ள மனிதர் அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றினார். அவர் தனது சிறையிருப்பிலும் தன் மூலம் தேவனிடம் திரும்பினவர்களை நேசித்தார், அவர்களுக்காக ஜெபித்தார். அவர் ரோமாபுரியின் சிறையிலிருந்தபோது, எபேசுவில் உள்ளவர்களுக்குத் தேவன் “ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை” தரும்படிக்கும், அவர்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் (எபேசியர் 1:17-19) ஜெபித்தார். அவர்கள் இயேசுவை அறிந்து, ஆவியின் வல்லமையால் அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்று ஏங்கினார்.

ஜானும் அப்போஸ்தலனாகிய பவுலும் தேவனிடம் தங்களை ஊற்றி, தாங்கள் நேசித்தவர்களுக்காக தங்களை அர்ப்பணித்து, ஜெபத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தனர். இன்று, நாம் பிறரை எவ்வாறு நேசிக்கிறோம், எப்படிச் சேவை செய்கிறோம் என்பதில் அவர்களுடைய உதாரணங்களைச் சிந்திப்போம். 

 

தேவனை குறித்த பிரமிப்பு

ஃபோபியா என்பது சில காரியங்கள் அல்லது சூழ்நிலைகளின் “எதேச்சையான பயம்” என வரையறுக்கப்படுகிறது. அராக்னோஃபோபியா என்பது சிலந்திகள் பற்றிய பயம் (இது பயப்படுவதற்கு முற்றிலும் சாதாரணமான பொதுவான விஷயம் என்று சிலர் சொல்லலாம்). பின்னர் குளோபோஃபோபியா (பலூன்கள் குறித்த பயம்) மற்றும் ஷாக்லெட்டோஃபோபியா (சாக்லேட் குறித்த பயம்) உள்ளது. இதுபோல சில நானூறு பயங்கள் உண்மையானவை மற்றும் ஆவணப்படுத்தப்பட்டவை. எதற்கு வேண்டுமானாலும் நாம் பயப்படக்கூடும் என்றே தோன்றுகிறது.

பத்து கட்டளைகளை பெற்றபின்னர், இஸ்ரவேலர்களின் பயம் குறித்து வேதாகமம் கூறுகிறது, “இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று” (யாத்திராகமம் 20:18). மோசேயோ அவர்களை இந்த சுவாரஸ்யமான வாக்கியங்களால் தேற்றினார்: “பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார்” (வ. 20). “பயப்படாதிருங்கள் ஆனால் பயந்திருங்கள்” என்று சொன்னதில் மோசே தனக்குத்தானே முரண்படுகிறார். உண்மையில், “பயம்” என்பதற்கு எபிரேய பாஷையில் குறைந்தபட்சம் இரண்டு அர்த்தங்கள் உள்ளன.எதைக் குறித்தாகிலும் நடுக்கமுண்டாகும் பயம் மற்றுதேவன் மீதுள்ள பயபக்தியான வியப்பு.

குளோபோஃபோபியா, ஷாக்லெட்டோஃபோபியா போன்ற பயங்கள் நமக்கு சிரிப்புண்டாக்கலாம். ஃபோபியாஸ் பற்றிய மிகவும் கவலைக்கிடமான அடிப்படை என்னவெனில், எல்லா வகையான விஷயங்களுக்கும் நாம் பயப்படக்கூடும். சிலந்திகளைப் போல நம் வாழ்வில் அச்சங்கள் ஊடுருவி, உலகம் ஒரு பயங்கரமான இடமாகத் தோன்றலாம். பயங்கள் மற்றும் அச்சங்களுடன் நாம் போராடும்போது, நம் தேவன் ஒரு வியத்தகு தேவன் என்பதை நினைவூட்டுவது நல்லது, இருளின் மத்தியில் இக்காலத்திற்கேற்ற அவருடைய ஆறுதலை நமக்களிக்கிறார். 

 

வேலையில் மனநிறைவு

தங்கள் பணி அர்த்தமுள்ளதாக மருத்துவர்கள் உணருகிறார்களா என்பதை அறிந்துகொள்ள, வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இரண்டு ஆய்வுகளை மேற்கொண்டனர். இரண்டு ஆய்வுகளும் பெரும்பாலான மருத்துவர்கள் தங்கள் பணியில் மன அழுத்தம் இருந்தாலும் அது அர்த்தமுள்ளதாகவே கருதுவதைக் கண்டறிந்துள்ளனர். அவர்களின் பணி திருப்திக்கான காரணத்தைக் கேட்டபோது, அவர்கள் நிரந்தரமான வேலை, பொறுப்புணர்வு, சுதந்திரம், வீட்டுவசதி, சக ஊழியர்கள் அவர்களை உணர்ந்த விதம் மற்றும் அவர்களின் திறன்களைப் பயன்படுத்துவதற்கும், கற்பிப்பதற்கும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் கிடைத்த வாய்ப்புகள் போன்ற காரணங்களைச் சொன்னார்கள்.

பிரசங்கியின் ஆசிரியரும் வேலையின் அர்த்தத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். அவர், "மனுஷன் சூரியனுக்குக் கீழே இருக்கிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன?" (வ.22) என்று கேட்கிறார். நாம் நாள் முழுவதும் "அலுப்புடனும்" "துக்கத்துடனும்" வேலை செய்கிறோம், பின்னர் இரவிலும் நம் "மனதுக்கு இளைப்பாறுதலில்லை" (வ.23). வேலை "மாயையே" என்று அவர் முடிக்கிறார் (வ.23). இருப்பினும், மனுஷன் புசித்துக் குடித்து, தன்பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப்பார்க்திலும். அவனுக்கு ஒரு நன்மையுமில்லை இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது (வ.24) என்பதை உணர்கிறார். அவர் இல்லாமல் யாரால் உண்ண முடியும் அல்லது இன்பம் காண முடியும்? (வ.25). வீட்டிலோ அல்லது வெளியிலோ உடல் உழைப்பு அல்லது மன முயற்சியுடன் வேலை செய்வது ஒரு கெளரவம். நம்மில் பெரும்பாலோர் வேலை நாளின் முடிவில் திருப்தியைத் தேடுகிறோம். சிலர் இந்த திருப்தியைச் சேவை, பண ஆதாயம் அல்லது நட்பின் மூலம் கண்டடைய முயலலாம், இன்னும் பலர் வேலையைத் தேவன் கொடுத்த பாக்கியமென்று உணருமட்டும் வருத்தத்தோடு பிரயாசப்படுவார்கள் (ஆதியாகமம் 2:15). நாம் அதிருப்தி கொள்ளுகையில், நாம் தேவனிடம் செல்லலாம். ஏனெனில், எந்த வேலையும் நமக்கு முழு மனநிறைவை அளிக்காது என்பதுதான் உண்மை, ஆனால் நாம் செய்யும் வேலையில் மெய்யான அர்த்தத்தைக் கண்டறியத் தேவன் உதவுவார். ஆன் ஹரிகீர்த்தன்